ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம்: ஜவாஹிருல்லா

ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்படும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜவாஹிருல்லா கூறியுள்ளதாவது:-

ஆன்லைன் ரம்மி எனப்படும், இணையச் சூதாட்டத்தால் ஏற்படும் உயிர்ப் பலியைத் தடுக்க தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருஅவர்களின் தலைமையில் குழு அமைத்து அக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவைத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி நிறைவேற்றியது. அச்சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ஆளுநர் கூறிய நிலையில், சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆன்லைன் ரம்மி நிறுவன அதிபர்களோடு ஆலோசனையிலும் ஈடுபட்டார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை 142 நாட்கள் கிடப்பில் வைத்திருந்த நிலையில் இக்காலகட்டத்தில் 47 தமிழர்கள் தம் உயிரை மாய்த்துக் கொண்டநிலையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாவைத் திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள மக்கள் நலன் சார்ந்த இருபத்திற்கும் அதிகமான சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயலாகும்.

தமிழ்நாடு ஆளுநரின் எதேச்சதிகார செயலைக் கண்டித்தும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்கக்கோரியும் வரும் 17ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இப்போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் நலனின் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சிசார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.