இனிமேல் கச்சா எண்ணெய் குழாயில் கசிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

நாகப்பட்டின மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருப்பதை சிபிசில் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே பட்டினச்சேரி பகுதியில் குழாயில் கச்சா எண்ணெய் கசிந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்ததை தமிழக அரசு மிக முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது கப்பலுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்ல, கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடலில் எண்ணெய் கலந்தது. சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டினச்சேரி கடற்கரையில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் அப்பகுதி மக்களும், மீனவர்களும் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறார்கள். குறிப்பாக ஏற்கனவே இது போல 2 முறை குழாயில் கச்சா எண்ணெய் கசிந்ததாலும், குழாயின் உடைப்பு சரி செய்யப்பட்டதாலும், மீண்டும் அதே போல இப்போதும் கச்சா எண்ணெய் கசிந்ததாலும் அப்பகுதி வாழ் மக்கள் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். காரணம் கச்சா எண்ணெய் கசிந்தால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதோடு, அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். மேலும் கச்சா எண்ணெய் கடலில் கலப்பதால் மீன் இனங்கள் பாதிப்புக்குள்ளாகும்.

கச்சா எண்ணெய் கசிவதும், குழாயின் உடைப்பு சரி செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதி வாழ் மக்கள் நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள். கச்சா எண்ணெய் கசிவு சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சனைக்கு நிரந்த தீர்வு அதாவது இனிமேல் கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருக்க சிபிசில் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். நாகப்பட்டின மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருப்பதை சிபிசில் நிறுவனம் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசும் இது போன்ற கச்சா எண்ணெய் கசிவு இனிமேல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.