பெண்களை வாய்மொழியாக திட்டுவதும் மீ டூவில்தான் வரும்: சாய் பல்லவி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் மீ டு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பெண்களை வாய்மொழியாக திட்டுவதும் மீ டூவில்தான் வரும் என்று கூறியுள்ளார்.

‘மீ டூ’ இயக்கம் ஒரு காலத்தில் சினிமா துறையை உலுக்கி எடுத்தது. பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகைகள் போர்க்கொடி தூக்கியதும் ‘மீ டூ’ இயக்கம் தொடங்கியது. அதன்பிறகு நடிகர்கள், இயக்குனர்களால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான நடிகைகள் பலர் வெளியே வந்து துணிச்சலாக மீ டூவில் புகார் தெரிவித்தார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள திரையுலகிலும் ‘மீ டூ’ இயக்கம் பரவி பரபரப்பானது. பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீ டூவில் சிக்கினர்.

இந்நிலையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சாய் பல்லவியிடம் மீ டூ குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து சாய் பல்லவி கூறும்போது, “பெண்களுக்கு உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மட்டுமன்றி, வாய்மொழி சித்திரவதை மற்றும் தொந்தரவு கொடுப்பதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. பெண்களை வாய்மொழியாக திட்டுவதும் அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் துஷ்பிரயோகம் ஆகும். அதுவும் மீ டூவில்தான் வரும்” என்றார்.