எல்லா நீதிமன்ற தீர்ப்புக்கும் “விலை” இருக்கு: ஜேம்ஸ் வசந்தன்

காசு கொடுத்தால் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்பன போன்ற வெட்டி வியாக்கியானங்களை விட்டுவிட்டு உலகின் மிய உயரிய விருதை நம் நாட்டுப் பாடல் பெற்றிருக்கிற தருணத்தில் அவர்களை வாழ்த்த மனமில்லாவிட்டாலும் பழிசொல்லாதிருப்பது பண்பாயிருக்கும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்து இருக்கிறார்.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடித்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். பேன் இந்தியா படமாக வெளியான இந்த தெலுங்கு படம் இந்திய அளவில் பெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனை படைத்தது. இதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் அண்மையில் கோல்டன் கிளோப் விருதை வென்றது. இதனைத் தொடர்ந்து ஆஸ்கருக்கு இந்த பாடல் தகுதி பெற்ற நிலையில், அந்த விருதையும் இந்த பாடல் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நேற்று நடந்துள்ளது. நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில்தான் ஆஸ்கர் மீதான நம்பத்தன்மை குறித்து விமர்சனங்களும் எழுந்து இருக்கின்றன. இதுகுறித்து பேஸ்புக்கில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டு உளார். அதில், “நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் வென்றவுடன் பாராட்டுகள் ஒருபுறம் வந்துகொண்டு இருந்தாலும், மறுபுறத்தில், ஆஸ்கர் விருது என்பதே பம்மாத்து; கோடிக்கணக்கில் லாபி செய்துதான் இதில் விருதுகளைப் பெறமுடியும்; இவர்களும் 80 கோடிக்கு மேல் செலவு செய்துதான் இதை வாங்கி இருக்கிறார்கள் என்கிற விமர்சனங்களும் கூடவே வருவதையும் காணமுடிகிறது. ஆஸ்கர் விருதின் மீது வைக்கப்படுகிற இந்தக் குற்றச்சாட்டுகளில் ஓரளவுக்கு அடிப்படை உண்மைகள் இருந்தாலும், எல்லா சமயங்களிலும் எல்லா வெற்றிகளும் இப்படிப் பெறப்பட்டவைதான் என்று சொல்லமுடியுமா? அதற்கு சாத்தியம் உண்டா? அப்படிப் பார்த்தால் எந்த விருதில், எந்த அங்கீகாரத்தில் அரசியல், லாபி, பண விளையாட்டு இல்லை?

விருதுகளுக்கு ஏன் போகவேண்டும்? மற்ற இடங்களில் இது இல்லையா? வேலைவாய்ப்பு, பதவி, பணி பேரம், நீதிமன்றத் தீர்ப்புகள் என்று எல்லாவற்றுக்கும் இன்று ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டு விட்டதே! எங்கோ ஒரு சிறு விஷயத்தில் நாம் பாரபட்சமாகவோ, சுயநலத்துடனோ, வேண்டியவர் வேண்டாதவர், என் இனம், என் மக்கள் என்றோ பல்வேறு சூழல்களில் நாம் தவறியதே இல்லையா? வெட்டி வியாக்கியானம் வேண்டாம் எல்லாமே அறப் பிறழ்வுதானே? அதனால் இந்த வெட்டி வியாக்கியானங்களை விட்டுவிட்டு உலகின் மிக உயரிய விருதை நம் நாட்டுப் பாடல் பெற்றிருக்கிற தருணத்தில் அவர்களை வாழ்த்த மனமில்லாவிட்டாலும் பழிசொல்லாதிருப்பது பண்பாயிருக்கும்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.