சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து போராட வேண்டும்: முக ஸ்டாலின்!

சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து போராட முதலமைச்சர் ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார்.

வலதுசாரி இந்துத்துவ கட்சியான பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றபின் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக தொடர்ந்து பாஜக மற்றும் வலதுசாரி இந்து அமைப்புகள் கூறுகின்றன. மேலும் மாட்டு இறைச்சியை கடத்துவதாக கூறி எண்ணிலடங்கா இஸ்லாமியர்கள் கும்பல் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லீம் ஒருவர், மாட்டு இறைச்சியை கடத்தியதாக கூறி கொல்லப்பட்டார். அதேபோல் ஹோலி பண்டிகையின் போது இஸ்லாமிய பெண்கள் மீது வண்ணப்பொடியை தூவி அடாவடியில் இளைஞர்கள் ஈடுபட்டனர். விஸ்வ ஹிந்து பரிசத் மற்று பஜ்ரங்தள் ஆகிய தீவிர இந்து அமைப்புகள் நடத்தும் ஊர்வலத்தில் தேவாலயங்கள் மற்றும் மசூதிக்களில் தாக்குதல் நடைபெற்று வருகின்றன.

அதேபோல் ஐநா பொதுச்சபை மார்ச் 15ஆம் தேதியை ‘இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரான நாள்’ என நிர்ணயித்துள்ளது. இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு (OIC) சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், இது தொடர்பான ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அது உலக அளவில் வாழும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எதிரான வெறுப்பு, பாகுபாடு மற்றும் வன்முறையைத் தடுக்கும் நோக்குடன் முன்மொழியப்பட்டது. ஓஐசி அமைப்பில் உள்ள 57 நாடுகளுடன் சேர்த்து, சீனா, ரஷ்யா உட்பட எட்டு நாடுகளும் இந்த தீர்மானத்தை ஆதரித்தன. ஆனால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியா ஆழ்ந்த கவலையை தெரிவித்தது. இந்து, சீக்கியம், பௌத்தம் போன்ற பிற மதங்களுக்கு எதிரான வன்முறை, பாகுபாடு மற்றும் வெறுப்பை இந்த தீர்மானம் புறக்கணிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திரிமூர்த்தி கூறினார்.

இந்துக்கள் கடைகளில் மட்டும் இந்துக்கள் வாங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகளில் இந்து அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடாகாவில் ஹிஜாப் சர்ச்சை பல்வேறு முஸ்லீம் பெண்களின் கல்வியை பறித்துள்ளது. உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களின் பல இடங்களிலிருந்து வெளிவருகின்றன. ‘முஸ்லிம்கள் கொரோனாவைப் பரப்புகிறார்கள்’ என்பது போன்ற வதந்திகளும் பரப்பப்பட்டன.

இந்தநிலையில் மார்ச் 15ஆம் தேதியை இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிரான நாளாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தனது டுவிட்டர் பதிவில், ‘‘சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் துன்புறுத்தலின் கேவலமான செயல்களால் வரலாறு நிரம்பியுள்ளது, அவை மனிதகுலத்தின் மீது ஒரு கறையாகவே இருக்கின்றன. இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினத்தில், சிறுபான்மையினரின் முறையான ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடவும், அரசியலமைப்பு விழுமியங்களுக்கு ஏற்ப அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தீர்மானிப்போம்’’ என்று கூறியுள்ளார்.