ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருப்பவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின்படி, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு உடல்நலக் குறைவு என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. என்ன பிரச்சினை என்று மருத்துவமனை தரப்பில் இருந்தும், ஈவிகேஎஸ் தரப்பில் இருந்தும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து கொண்டிருக்கின்றனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த 10-ந் தேதி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார். எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை டெல்லியில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். டெல்லியில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுவிட்டு, விமானம் மூலம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று மாலை சென்னை திரும்பினார். ஏற்கனவே இதய நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளதால் அவ்வப்போது மூச்சுவிடுவதில் அவருக்கு சிரமம் ஏற்படுவது வழக்கம். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதால் கடுமையான உடல் சோர்வுடன் காணப்பட்டு வந்தார். இதற்கிடையே டெல்லிக்கு சென்று திரும்பிய பயண களைப்பும் அவரை வாட்டி வதைத்தது.

இந்தநிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய சில மணி நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மூச்சு விடுவதிலும் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதி அதைத்தொடர்ந்து போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. அவரது மனைவி வரலட்சுமி உடன் இருந்து கவனித்து வருகிறார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி ஈரோடு கிழக்கு தொகுதியிலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.