‘சந்திரமுகி -2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு: கண்ணீருடன் விடைபெற்ற கங்கனா ரனாவத்!

வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி -2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகை கங்கனா ரனாவத் ‘சந்திரமுகி 2’ படத்தில் தனது காட்சிகளை முடித்துள்ளார்.

சந்திரமுகி படத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தை பி.வாசு இயக்க ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். ‘சந்திரமுகி 2’ படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் ‘சந்திரமுகி 2’ படத்தில் தனது கதாபாத்திரத்தை முடித்துள்ளதாக நேற்று பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், “சந்திரமுகி படத்தில் இன்று நான் எனது கதாபாத்திரத்தை முடிக்கவிருக்கும் நிலையில், நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் இருந்து விடைபெறுவது மிகவும் கடினமாக உள்ளது. நான் ராகவா லாரன்ஸுடன் எப்போதும் புகைப்படம் எடுத்ததில்லை. ஏனென்றால் நாங்கள் எப்போதும் திரைப்பட உடையில் தான் இருப்போம். அதனால் இன்று காலை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே புகைப்படம் எடுக்க கோரினேன். லாரன்ஸ் மாஸ்டரால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஏனெனில் அவர் நடன இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் இன்று அவர் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்ல சூப்பர் ஸ்டார். ஆனால் ஒரு நம்பமுடியாத உயிரோட்டமான, கனிவான மற்றும் அற்புதமான மனிதர். உங்களின் கருணை, அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் எனது பிறந்தநாளுக்கான அனைத்து முன் பரிசுகளுக்கும் நன்றி. உங்களுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கேக் வெட்டி அவரை படக்குழுவினர் வழியனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், மும்பையில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.