மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு கருத்து, ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு கருத்து: கே.பி.முனுசாமி!

எதிர்க்கட்சி ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியான வேறு ஒரு நிலைப்பாட்டையும் மு.க.ஸ்டாலின் கொண்டுள்ளதாக கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டு, அதிமுக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறுகையில், எதிர்க்கட்சியாக இருந்தபோது மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். ஆட்சிக்கு வந்த பின்னர் 100 நாட்களுக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அது நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் முடிவடைந்துள்ளது, பொதுமக்கள் வழங்கிய எந்த மனுவிற்கும் முறையான தீர்வு கிடைக்கவில்லை. ஏற்கனவே மக்களை ஏமாற்றுவதற்காக திமுக தலைவர் அந்த நாடகத்தை நடத்தினார். தற்போது இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களிடத்தில் மனுக்களை வாங்கி வருகிறார்கள். அதற்கு என்ன தீர்வு கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து 8 வழிச்சாலை பற்றிய கேள்விக்கு, மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு நிலைப்பாடும் கொண்டுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்தார்கள். ஆனால் தற்போது 8 வழிச்சாலை நல்லது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசி வருகிறார். அதேபோல் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடையை படிப்படியாக மூடுவோம் என்று சொன்னார்கள். ஆனால் மூடவில்லை. கடந்த காலத்தில் பொங்கல் பண்டிகைக்காக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ரூ.2500 பொதுமக்களுக்கு வழங்கியது. ஆனால் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், ரூ.5000 வழங்க வேண்டும் என கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தால் ரூ. 5000 கொடுப்போம் என்று கூறினார், ஆனால் தற்போது ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு கருத்து, ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு கருத்து என மக்களை ஏமாற்றக்கூடிய தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார் என்று தெரிவித்தார்.