பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு: பிரேமலதா

பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவளிக்கிறது. அனைவரும் பயன்படுத்தும் ஆவின் பால் பிரச்சனைக்கு, அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று
பிரேமலதா கூறியுள்ளார்.

திருச்சியில் திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக எம்பி திருச்சி சிவா ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதல், திமுகவின் உட்கட்சி பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டியது. திருச்சி சிவாவின் காரை நொருக்கிய கே.என்.நேரு ஆதரவாளர்கள், காவல் நிலையத்தில் புகுந்தும் சேரை தூக்கி அடித்தனர். காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மட்டுமின்றி, ஆளும் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா கூறியதாவது:-

பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவளிக்கிறது. அனைவரும் பயன்படுத்தும் ஆவின் பால் பிரச்சனைக்கு, அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் காரணம் அல்ல, அரசுதான் காரணம்.

திமுகவில் உட்கட்சி சண்டை அதிகரித்து வருகிறது. கலைஞர் இருந்தால் இது போன்று நடக்க வாய்ப்பு இல்லை. திமுக தலைவரின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்பதையே இது காட்டுகின்றது, இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு தான் முதல் கையெழுத்து எனக் கூறியவர்கள், தற்பொழுது நீட் தேர்வு தோல்வியால் இறந்த மாணவி அனிதாவின் பெயரை ஒரு கட்டிடத்திற்கு வைத்ததோடு தன் கடமையை முடிந்து விட்டதாக நினைக்கின்றனர். அது தவறு, நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களையும், ஆசிரியர்களையும், கல்வியாளர்களையும் குழப்ப வேண்டாம்.

ஈரோடு தேர்தல் ஒரு வித்தியாசமான இடைத்தேர்தல். இந்தியாவில், தமிழகத்தில் எங்கும் நடக்காத ஒரு புதிய முறையை பின்பற்றி உள்ளனர். வாக்காளர்களை ஆடு மாடுகளைப் போல பட்டியில் அடைத்து வைக்கும் புதிய முறையை கொண்டு வந்துள்ளனர். ஜனநாயகம் எங்கு போகின்றது என கேள்வி குறியாக உள்ளது, இது தவிர்க்கப்பட வேண்டும். இதனை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் மொழி தேர்வில் ஆப்சென்ட் ஆகியுள்ளது கவலை அளிக்கக் கூடியது. இது ஒரு அவமானமான செயலாகும், உடனடியாக கல்வி அமைச்சர் இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழை வைத்து அரசியல் செய்பவர்கள் இதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.