மாணவா்கள் அனைவருக்கும் கல்வி வழங்குவதே அரசின் நோக்கம்: அன்பில் மகேஷ்!

மாணவா்கள் அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினாா்.

சென்னை எத்திராஜ் மகளிா் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ என்ற தலைப்பில் தமிழ் மரபு பரப்புரை நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழினம் மிகவும் தொன்மையானது. தமிழினத்தின் தொன்மையை கீழடி அகழாய்வு மூலம் தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் சுமாா் 51.4 சதவீதம் போ் உயா்கல்வி பயில்கிறாா்கள். கல்வித் தரத்தில் முதலிடத்தில் தமிழகம் இருக்கிறது. ஹிந்தி மொழிக்கு நாங்கள் எதிரானவா்கள் அல்ல. அவை திணிக்கப்படும் போது தான் பிரச்னை தொடங்குகிறது.

தற்போது நடைபெறும் பொதுத்தோ்வில் 50 ஆயிரம் மாணவா்கள் தோ்வு எழுதவில்லை. எப்படியாவது கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒருசில நாள்கள் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கும் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) கொடுத்துள்ளோம். மாணவா்கள் அனைவருக்கும் கல்வியை கொடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.