ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி செய்த காரியத்தால் நெகிழ்ந்த சிவராஜ்குமார்!

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் செயலால் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் நெகிழ்ந்து போனாராம். இது குறித்து அறிந்த ரசிர்களோ தலைவரை பாராட்டுகிறார்கள்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெயிலர். படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருக்கிறது. அந்த படத்தில் பிரபல கன்னட நடிகரான சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சிவராஜ்குமாரின் தந்தையான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் ரசிகர் ரஜினி. அதனால் ராஜ்குமார் மகன் தன் படத்தில் நடிப்பதில் சந்தோஷப்பட்டார். இந்நிலையில் தான் படப்பிடிப்பு தளத்தில் சிவராஜ்குமார் மீது ரஜினி கோபப்பட்டு பேசியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கேரவன் உண்டு. ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் தன் ஷாட் முடிந்ததும் கேரவனுக்குள் செல்லும் பழக்கம் இல்லாதவர் ரஜினி. ஸ்பாட்டில் தான் இருப்பார். ஒரு ஓரமாக சேர் போட்டு புத்தகம் வாசிப்பார். இல்லை என்றால் படக்குழுவினருடன் பேசுவார். படமாக்கப்படும் காட்சியை பார்த்துக் கொண்டிருப்பாரே தவிர கேரவனுக்கு செல்ல மாட்டார். ஒரு பெரிய ஸ்டாராக இருந்தும் ரஜினி இப்படி எளிமையாக இருப்பது அனைவரையும் கவர்ந்துவிட்டது.

இந்நிலையில் சிவராஜ்குமாருக்கும் ஒரு தனி கேரவன் கொடுத்திருக்கிறார்கள். அவரால் வெயில் தாங்க முடியாமல் தன் ஷாட் முடிந்ததும் கேரவனுக்கு ஓடியிருக்கிறார். அப்பொழுது ரஜினியே வெயிலில் ஸ்பாட்டில் இருப்பதை பார்த்த சிவராஜ்குமார், அண்ணனே வெளியே இருக்கும்போது நாம் மட்டும் கேரவனுக்குள் செல்வது மரியாதை இல்லை என்று நினைத்திருக்கிறார். இதையடுத்து கேரவனுக்கு செல்லாமல் ஸ்பாட்டிலேயே அமர்ந்திருக்கிறார் சிவராஜ்குமார். வெயில் தாங்க முடியாமல் சோர்வாகி அடிக்கடி குளுக்கோஸ் குடித்திருக்கிறார். இதை பார்த்த ரஜினி கோபம் அடைந்து, எனக்கு வெயில் ஒத்துக்கும் நான் வெளியே இருக்கிறேன். உங்களுக்கு தான் ஒத்துக்காதுல அப்புறம் ஏன் இந்த தேவையில்லாத வேலை. ஒழுங்கா கேரவனுக்குள் போங்க என்று அவரே அழைத்துச் சென்றாராம். சிவராஜ்குமார் சங்கடப்படக் கூடாது என்று அவர் தொடர்பான காட்சிகளை படமாக்கும் வரை அவருடன் சேர்ந்து கேரவனுக்குள் இருந்தாராம் ரஜினி. அவர் செய்த காரியத்தால் சிவராஜ்குமார் நெகிழ்ந்துவிட்டாராம்.

படப்பிடிப்பு முடிந்து பெங்களூர் சென்ற சிவராஜ்குமார் தன்னை பார்க்க வருபவர்களிடம் எல்லாம் ரஜினி செய்ததை பற்றியே பெருமையாக பேசி வருகிறாராம். ரஜினி செய்த காரியம் குறித்து அறிந்த தலைவர் மற்றும் சிவராஜ்குமாரின் ரசிகர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.