இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை!

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக இன்று (மார்ச் 20) இந்தியாவிற்கு வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு அளித்தார்.
இதையடுத்து புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சந்திப்பின் போது, இரு தரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். குறிப்பாக இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.