மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 29, 30ல் போராட்டம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு!

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரத்தை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக மார்ச் 29, 30ல் போராட்டம் நடத்தப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

மேற்கு வங்கத்திற்கு எதிராக ஒன்றிய அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது. ஒன்றிய அரசிடம் இருந்து எந்த ஒரு திட்டத்திற்கும் நிதி பெறாத ஒரே மாநிலம் மேற்கு வங்கம்தான். பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் சர்வாதிகாரப் போக்குடன் ஒன்றிய அரசு நடக்கிறது. அதானி மற்றும் அவரது நண்பர்கள் ஒரு சிலருக்காக மட்டுமே பாஜக அரசு பணியாற்றுகிறது. வெளிநாட்டுக்கு தப்பியோடிய மெஹூல் சோக்சிக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ் ஒன்றிய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து நான் போராட இருக்கிறேன். ஒன்றிய அரசை கண்டித்து கொல்கத்தாவில் அம்பேத்கர் சிலை முன்பு வரும் 29ம் தேதி தொடங்கும் போராட்டம் 30ம் தேதி மாலை நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.