தமிழக சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேறியது!

தமிழக சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

இணையப் பயன்பாடு அதிகரித்து விட்ட சூழலில் ஆன்லைன் வாயிலான விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் அதிகரித்து வருகிறது. அதில் ஆன்லைன் ரம்மி என்பது மிக மோசமான நிலைக்கு தள்ளி கொண்டிருக்கிறது. இதில் பணத்தை இழந்து வேறு வழியின்றி உயிரை மாய்த்து கொண்ட பலரை தமிழகம் கண்கூடாகப் பார்த்திருக்கிறது. இந்த அவலத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு தமிழக அரசிடம் இருந்து ஆளுநர் சில விளக்கங்களை கேட்டார். அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பின்னர் ஆளுநரை நேரில் சந்தித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார். இருப்பினும் அவர் உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் மசோதா காலாவதியானது.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் இன்று தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மனித உயிர்களை பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. எந்த சட்டத்தின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும் தான். மாநில மக்களை காப்பது ஒன்றே சட்டத்தின் கடமை. மனசாட்சியை அடகு வைத்து விட்டு எங்களால் செயல்பட முடியாது. மாநிலத்தில் உள்ள மக்களை காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு.

மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு உரிமை உண்டு. இந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல இதயத்தாலும் உருவாக்கப்பட்டது. எனவே ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை உறுப்பினர்கள் நிறைவேற்றி தர வேண்டும். மசோதா ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் என்று ஸ்டாலின் கூறினார்.

இதையடுத்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களை ஆளுநர் ரவி சந்தித்தில் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. மக்கள் தான் எஜமானர்கள், ஆளுநர்கள் அல்ல எனக் கூறினார்.

பின்னர் பேசிய கொங்கு ஈஸ்வரன், ஆன்லைன் சூதாட்டத்தால் இழந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு. இன்னும் தாமதப்படுத்தினால் சட்டமன்றத்தையும், மாநில மக்களையும் ஆளுநர் அவமதிப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும் என்றார்.

ஷாநவாஸ் பேசுகையில், தமிழ்நாடு அரசு சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யவில்லை. ஆளுநருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்கிறது. ஆளுநர் நியமனங்களில் மாநில அரசுகளின் கருத்து கேட்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்க ஒருமனதாக மசோதா நிறைவேறியது.

இந்த மசோதா மீதான விவாதத்தின் போது கட்சிக்கு ஒருவர் எழுந்து ஆதரவா எதிர்ப்பா என சொல்லலாம் என சபாநாயகர் தெரிவித்தார். அதன்படி அதிமுக சார்பில் தளவாய் சுந்தரத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஆதரவு கொடுப்பதாக கூறிவிட்டு அமர்ந்தார். மேலும் ஓபிஎஸ் பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பளித்தார். அப்போது ஓபிஎஸ் பேசுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி. இந்த மசோதாவை அதிமுக முழு மனதாக ஏற்று ஆதரவு கொடுக்கிறது என்றார்.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். அவர் பேசுகையில் கட்சிக்கு ஒருவர் என சொல்லிவிட்டு ஓபிஎஸ்ஸுக்கு எதற்காக பேச அனுமதி கொடுத்தீர்கள். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் அவர் இல்லை என்றாலும் அவரது இருக்கையை மாற்றாமல் உள்ளீர்கள் என கேட்டு அமளியில் ஈடுபட்டார்.

உடனே சபாநாயகர் அப்பாவு பேசுகையில் ஓபிஎஸ் பேச அனுமதி அளித்ததில் எனக்கோ இந்த பேரவைக்கோ எந்த உள்நோக்கமும் இல்லை. முக்கியமான சட்ட மசோதா, ஓபிஎஸ் முன்னாள் முதல்வர், அனுபவசாலி, தற்போது எம்எல்ஏ அந்த முறையில்தான் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனவே அதிமுக உறுப்பினர்கள் அமருங்கள் என்றார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.