தமிழக மீனவர்கள் கைது: மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்!

கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

இலங்கை கடற்படையினரால் இன்று தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு பல கண்டனக் கடிதங்களை அனுப்பியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. இதனை தடுத்து நிறுத்திட இந்திய அரசு தூதரக முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையிலும் மீனவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே பிரதமர் இவ்விவகாரத்தில் தலையிட்டு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 28 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.