எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா?: கி.வீரமணி

மாமிசம் சாப்பிடுகிறவன் என்பதற்காக, நான் எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா?” என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பழமையான சைவ மடங்களில் ஒன்று, மயிலாடுதுறை மாவட்டத்தின் தருமபுரம் ஆதீனம் . இந்த மடம் 16ம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது. இம்மடத்தில் ஆண்டு தோறும் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள், பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த பொறுப்பில் உள்ளார்.

2022ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது தருமபுரம் ஆதீனம். இந்த நிலையில், ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்தார். பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. வழக்கம் போல பட்டினப்பிரவேசம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் மதுரை ஆதினம் 93 வது மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரியர் ஆதின மடத்தின் வெளியே மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், பட்டின பிரவேசம் நடத்துவது குறித்து என்னுடைய கோரிக்கையை வைத்திருந்தேன். அதனை ஏற்ற முதல்வருக்கும், அறநிலைத்து துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். மேலும் முதல்வர் அனைத்து சமூகத்தையும் அரவணைத்துப் போக வேண்டும் என கேட்டுக்கொண்டார். பட்டின பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

மதுரை ஆதினத்தின் இந்த தகவலால் வேதனை அடைந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

தருமபுர பண்டார சன்னதி பல்லக்கில் செல்லுவது குறித்து 8.5.2022 நாளிட்ட ‘விடுதலை’யில் ஓர் அறிக்கையைக் கொடுத்துள்ளோம். அதில் குறிப்பிட்டிருந்ததாவது: மன்னார்குடி ஜீயர் – அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் நடமாட விட முடியாது என்று பகிரங்கமாக சவால் விடுகின்றார் என்றால், இது 1971 ஆம் ஆண்டு ஆத்திக – நாத்திகப் பிரச்சாரத்தின் ‘புதிய அவதாரம்’தானே!’ இதன் பின்னணி, பின்பலம் எங்கே, எந்த நோக்கத்துடன் என்பது மிகவும் ஆராயத்தக்கதும், புரிந்துகொள்ள வேண்டியதும் ஆகும்! இது முழுக்க மனிதநேய பிரச்சினையின்பாற்பட்டதாகும். திமுக ஆட்சியின் முற்போக்குக் கொள்கைத் திட்டங்களை மிரட்டிப் பணிய வைத்து முடக்கும் ஒரு காவித் திட்டம். இதில் ஓட்டை போட்டுவிட்டால் மற்றபடி மற்ற திட்டங்களில் நாம் வெற்றி அடையலாம் என்பதற்கான ஓர் ஒத்திகை என்பதை தமிழ்நாடு அரசுக்கு குறிப்பாக மரியாதைக்குரிய நமது முதலமைச்சர் அவர்களுக்கு நாம் கனிவுடன், உரிமையுடன் கொள்கை உணர்வு காரணமாக சுட்டிக்காட்டுகிறோம்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அன்று சுட்டிக்காட்டியதுபோல், பெரும்பான்மை மக்கள் நலனுக்கும் – சமூகநீதிக்கும் எதிரானவர்கள்தான் இந்த ஆன்மிக போர்வை போர்த்திய ‘நரியர்கள்!’ எனவே, இதுபற்றிய அச்சுறுத்தல்கள், அவதூறு புழுதிகள்கண்டு பின்வாங்கினால், எந்த ஒரு மாற்றமும், புரட்சிகரமான முன்னெடுப்புத் திட்டங்களும் வரும் நான்கு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியும், இன்றைய முதலமைச்சர் அவர்களும் செய்யவே இயலாத அளவுக்கு ஆக்கவே இன எதிரிகள் துணிவார்கள்.

”துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கு” நடைமுறைத் திட்டங்களில் மறுபரிசீலனை – ஆட்சிக்கு இவையெல்லாம் சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறு ‘விடுதலை’யில் குறிப்பிட்டு இருந்தோம். ஆனாலும், நடக்கக் கூடாதது – இப்போது நடந்துவிட்டது. இதனை எதிர்பார்க்கவில்லை. ஆன்மிகம் என்பதைவிட இதன் பின்னணியில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். என்ற அரசியல் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

தங்களுக்கான வெற்றி என்று துள்ளிக் குதிப்பார்கள்; மதவெறி காவி சக்திகளும் மகிழ்வார்கள். பிற்போக்காளர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் மனித உரிமைப் போராளிகளுக்கும் தமிழ்நாடு அரசின் பின்வாங்குதல் – இந்த பல்லக்குப் பிரச்சினையில் ஒரு தோல்வி என்று ஊடகங்கள் சித்தரிக்கக் கூடும். எப்போதுமே சமூகநீதிக்கான, மனித உரிமைப் போராட்டங்கள் உடனடியாக வெற்றியை தந்ததாக வரலாறு இல்லாவிட்டாலும், இறுதியில் சிரிப்பவர்கள் பகுத்தறிவாளர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு வரலாற்றில் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு.

அது ஒரு புறமிருக்கட்டும். நமக்குள்ள ஆதங்கம் எல்லாம், தி.மு.க. ஆட்சிக்கு இப்படி ஒரு பின்னடைவை – களங்கத்தை – இந்தத் தடுமாற்ற முடிவு உருவாக்கிவிட்டதே என்பதுதான்! தி.மு.க. ஆட்சி என்ற ”வாராது வந்த மாமணி”யான ஆட்சியின் சாதனைகளும், புகழும் என்றும் ”ஆயிரங்காலத்துப் பயிராக” அமைய வேண்டும் என்பதில் நம்மைவிட அதிக அக்கறை உள்ளவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. எனவேதான் கொள்கைச் சறுக்கல்களோ, வழுவல்களோ நடந்துவிடக் கூடாது என்பதில் நமது பார்வையும், கவலையும், பொறுப்பும் அரசியலுக்கு அப்பாற்பட்ட இனமானப் பிரச்சினையாகும்! மக்களாட்சியில் சில முடிவுகளை ஆட்சியாளர்கள் மறுபரிசீலனை செய்வது தவிர்க்க இயலாததுதான். ஆனால், அப்படிப்பட்ட மறுபரிசீலனைகள் அடிப்படை மனித உரிமைகளையும், சமத்துவ நெறிகளையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது.

மதுரை ஆதின கர்த்தர் என்னைக் கேலி செய்வதாக நினைத்து, பல்லக்கை மனிதர்கள் சுமப்பது அநாகரிகம்; மனித உரிமை பறிப்புக் கூடாது என்ற அத்துணை முற்போக்கான தலைவர்களை, சிந்தனையாளர்களைச் கேலி செய்துள்ளார். உலகம் முழுவதும் இது விளம்பரப்படுத்தப்பட்டதாம் என்று கூறுகிறார். உலகம் முழுவதும் அந்த அநாகரிகமான, மனிதனை மனிதன் தூக்கி சுமப்பதைக் கண்டு இப்படி இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பழைய மனித அநாகரிகங்களா? என்றுதான் முகம் சுளிப்பார்கள் – சிரிப்பார்கள் என்பதை பக்குவமடையாத பண்டார சந்நியாசி புரிந்துகொள்ள சக்தியற்ற பரிதாபத்திற்குரியவர் ஆவார்! மனிதர்களை தூக்கிச் சுமப்பதற்கு ஒரு விசித்திரமான புதிய வாதம் – முன் வைக்கப்படுகிறது! தூக்குபவர்களே விரும்பி வந்துதான் தூக்கிச் சுமக்க முன் வருகிறார்களாம்! – இது அறிவுபூர்வமாகவோ, சட்டபூர்வமாகவோ ஏற்கத்தக்கதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கைரிக்சாவை இழுத்தவர்கள் அவர்களாகவே விரும்பித்தான் ஓட்டுகிறோம் என்று கூறி, இன்று இழுத்தால் சட்டம் அனுமதிக்குமா? கருணைக் கொலை செய்ய, முற்றிய நோயினால் அவதியுறுகிறார்கள் – வலியும், வேதனையும் தாங்க முடியாத நிலை அவர்களுக்கு, ஆகவே, அதைச் செய்கிறோம் என்று எந்த டாக்டராவது சொன்னால் அனுமதிப்பார்களா? குறிப்பிட்ட மாதங்களைத் தாண்டிய கருவை அதனைச் சுமப்பவர்கள் விரும்பி, தானே கருவை அழித்துக் கொள்ள விரும்புகிறார்கள் – அனுமதிக்கலாமா? பெண் குழந்தைகளை கள்ளிப்பால் தந்து குடும்பத்தினர், ஏன் தாயுமே அழிக்க முன் வந்தால், சட்டமும் – அரசும் அனுமதிக்குமா? மனித உரிமை மலிவான விலைச் சரக்கா? இந்த அரசு சிலரைத் ‘திருப்தி’ செய்வதற்காக அளவுக்கு அதிகமாக ‘ஆன்மிகம்’, ‘ஆன்மிகம்’ என்று ‘தம்பட்டம்’ அடிக்க வேண்டுமா? தந்தை பெரியார் சொன்ன ஒரு பழமொழிதான் நமக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. ”மாமிசம் சாப்பிடுகிறவன் என்பதற்காக, நான் எலும்புத் துண்டைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அலைய வேண்டுமா?” என்பதுதான் அது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.