சீயான் விக்ரமுக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டிருக்கிறது!

பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் சீயான் விக்ரம். இந்நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக மேனேஜர் சூர்யநாராயணன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சீயான் விக்ரமின் மேனேஜர் சூர்யநாராயணன் டுவிட்டரில்கூறியிருப்பதாவது:-

பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த சீயான் விக்ரமுக்கு நீங்கள் கொடுத்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. பயிற்சியின்போது சீயானுக்கு காயம் ஏற்பட்டு விலா எலும்பு முறிந்துவிட்டது. அதனால் அவரால் தங்கலான் படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்து கொள்ள முடியாது. உங்களின் அன்புக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். விரைவில் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார் என்றார்.

சூர்யநாராயணனின் டுவீட்டை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். எல்லாம் கண் திருஷ்டி தான். சீயானுக்கு சுத்திப் போடச் சொல்லுங்கள். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றிருக்கிறது.
படம் ரிலீஸான அதே நாளில் ஆன்லைனில் கசிந்துவிட்டாலும், பொன்னியின் செல்வன் 2-ஐ தியேட்டரில் தான் பார்த்து ரசிப்போம் என்கிறார்கள் ரசிகர்கள். இதனால் படம் ரிலீஸான ஐந்தே நாட்களில் ரூ. 250 கோடி வசூல் செய்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 படம் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் பார்க்கும் அனைவரும் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் நடிப்பை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆதித்த கரிகாலனாக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் விக்ரம். அதனால் தான் படம் பார்க்க தியேட்டருக்கு வரும் அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்துக் கொண்டிருக்கிறார்.

முன்னதாக நடந்த பொன்னியின் செல்வன் 2 நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களை கவர்ந்தார். தங்கலானுக்காக முடி வளர்த்திருக்கிறார் விக்ரம். அதே கெட்டப்பில் தான் பொன்னியின் செல்வன் 2 பட விளம்பர நிகழ்ச்சிகளில் கெத்தாக, ஸ்டைலாக கலந்து கொண்டார். விளம்பர நிகழ்ச்சிகள், படம் என அனைத்திலும் கெத்து காட்டிய விக்ரமை பார்த்து பலர் கண்வைத்து விட்டதாக ரசிகர்கள் நம்புகிறார்கள். அதனால் தான் அவருக்கு சுத்திப்போடச் சொல்லியிருக்கிறார்கள். வயது அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே என ரிஸ்க் எடுக்காமல் ஒதுங்குபவர் அல்ல சீயான் விக்ரம். காயம் எல்லாம் அவருக்கு புதிது அல்ல. அதை பெரிதாக எடுத்துக் கொண்டு ஓரமாக அமரும் ஆளும் அவர் இல்லை. அதனால் இந்த காயம் விரைவில் குணமடைந்து தங்கலான் படப்பிடிப்பில் கலக்கலாக கலந்து கொள்ளத் தான் போகிறார், அதை நாம் பார்க்கத் தான் போகிறோம்.