ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்கே சுரேஷ் வங்கி கணக்குகள் முடக்கம்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்கே சுரேஷின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் ஏராளமான மக்கள் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளனர். முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகக் கூறி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 2500 மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக பிரமுகரான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு சமீபத்தில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் வெளிநாடு தப்பிச் சென்ற ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஆர்கே சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர். ஆருத்ரா மோசடி வழக்கில் சம்மன் அனுப்பியும் நடிகரும் பாஜக பிரமுகருமான ஆர்கே சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆர்கே சுரேஷின் வங்கிக் கணக்கில் நடைபெற்றுள்ள பண பரிவர்த்தனை குறித்த ஆய்வு செய்யவே அவரது வங்கிக் கணக்குகளை முடக்கியிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.