21-ந்தேதி நடக்கும் நினைவேந்தல் கூட்டத்தில் வைகோ பங்கேற்பு!

மே-17 இயக்கம் ஆண்டு தோறும் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மே 21-ந்தேதி மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் கடற்கரையில் 14-வது நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஈழத்தமிழ் உணர்வாளர்களும், ம.தி.மு.க. தொண்டர்களும் பங்கேற்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

தமிழீழத்தில் நடந்தேறிய ஈழ இனப்படு கொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக கடந்த 2011-ம் ஆண்டு முதல் மெரினா கடற்கரையில் ‘ஈழத் தமிழர்களுக்கான நினைவேந்தல்’ நிகழ்ச்சியை நடத்தி வந்தோம். 2017-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த நிகழ்ச்சி நடத்த முடியாமல் தடைபட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, வரும் 21-ந்தேதி மாலை 4 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அப்போது மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த உள்ளோம். தமிழர்களுக்கு எதிரான இந்துத்துவ கொள்கை கொண்டவர்களை தவிர அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று திருமுருகன் காந்தி அழைப்பு விடுத்து இருந்தார்.

இதனை ஏற்று வைகோ இதில் கலந்து கொள்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிங்கள அரசால், ராணுவத்தால் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008-ம் ஆண்டு இறுதிப் பகுதியிலும், 2009-ம் ஆண்டு தொடக்கத்திலும் ஒன்றரை லட்சம் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையே உறுதிப்படுத்தியது. ஈழத்தமிழர் படு கொலையைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் தீக்குளித்து மாண்டனர். மே-17 இயக்கம் ஆண்டு தோறும் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மே 21-ந்தேதி மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் கடற்கரையில் 14-வது நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஈழத்தமிழ் உணர்வாளர்களும், ம.தி.மு.க. தொண்டர்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.