மீண்டும் ரூ.1000 நோட்டை கொண்டு வருவார்கள்: ப.சிதம்பரம்

மீண்டும் 1000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என விமர்சித்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

2000 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில். 2019ல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே ரூ.2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

எதிர்பார்த்ததைப் போல அரசாங்கம்/ஆர்பிஐ ரூபாய் 2000 நோட்டை திரும்பப் பெற்றுள்ளது. நோட்டுகளை மாற்றுவதற்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. ரூ. 2000 நோட்டு என்பது பரிமாற்றத்திற்கான சரியான தொகை அல்ல. 2016 நவம்பரிலேயே நாங்கள் இதைச் சொன்னோம். ரூ. 2000 நோட்டுகள் க்ளீன் நோட் அல்ல. மக்கள் தங்கள் கறுப்புப் பணத்தை, தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ரூ. 500, ரூ. 1000 பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க ரூ.2000 நோட்டுகள் கட்டுக்கட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. 500 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கிக்கு கட்டாயம் ஏற்பட்டது. இப்போது மீண்டும் ரூ. 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மொத்தத்தில் பணமதிப்பிழப்பு என்பது சாதாரண மக்களுக்கு எதிரானது என்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது. மீண்டும் 1000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.