2000 நோட்டு வாபஸ் பெறப்படுவதால் திமுகவுக்கு தான் பாதிப்பு: அண்ணாமலை

2000 நோட்டு வாபஸ் பெறப்படுவதால் திமுகவுக்கு தான் பாதிப்பு எனக் கூறியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. வங்கிகள் ரூ. 2000 நோட்டுகள் விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ள ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று கூறியுள்ளது. மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி கிளைகளில் ரூபாய் 2000 நோட்டுகளை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 20,000 வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளிடையே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி 2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தனர், இப்போது 2000 ரூபாய் நோட்டையே ஒழிக்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “என்னிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இல்லை. பெரும்பாலான மக்களிடமும் தற்போது ரூ.2000 நோட்டுகள் இல்லை. நானும் 2000 ரூபாய் நோட்டுகளைப் பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. 2000 நோட்டுகளை வாபஸ் பெற்றது பணமதிப்பிழப்பு நடவடிக்கை இல்லை. இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்கு பிரதமர் மோடி எடுக்கும் நல்ல முடிவு இது. கடந்த மூன்றரை வருடங்களாக 2000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதால் திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.