நடிகை சுனைனா கடத்தப்பட்டதாக தீயாய் பரவும் செய்தி!

நடிகை சுனைனா கடத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் நகுல் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. மாசிலாமணி, வம்சம், சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷால் ஜோடியாக ‘லத்தி’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை சுனைனா காணவில்லை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அவரை காணவில்லை என்றும், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இதனால் சுனைனா கடத்தபட்டாரா என்ற கேள்வியுடன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சுனைனா கடந்த மே 14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து அவரது வலைத்தள பக்கத்தில் எந்த பதிவுகளும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சுனைனா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெஜினா’ பட புரமோஷனுக்காக இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அயிரா புரொடக்ஷன் தயாரிப்பில் டொமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. இந்தப் படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் சுனைனா காணவில்லை என்ற செய்தியை பரப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.