வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்!

வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நல்லக்கண்ணு, திருமாவளவன், சீமான், ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், மே 17 இயக்கம், தமிழ்தேசிய இயக்கங்கள், திராவிட அமைப்புகள், பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

காடு என்கிற வரையறைக்குள் வருகின்ற பகுதிகள் அனைத்திலும் காடு சாராத திட்டங்கள் அதாவது நெடுஞ்சாலைகள் அமைப்பது, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது தேவைக்கு அதிகமாகவோ அல்லது தேவையில்லாமலோ காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980.

இந்தநிலையில் கடந்த மார்ச் 29ம் தேதி, 1980ம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. காடு மற்றும் காட்டு வளங்களை பாதிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளதாக கூறி, இம்மசோதாவை திரும்ப பெற வேண்டும் என எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இருப்பினும் மசோதா அறிமுகம் செய்யப்பட்ட அன்றே நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இம்மசோதா மீது கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் 15 நாட்களுக்குள் தங்கள் கருத்துகளை ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் கடிதம் அல்லது ஈமெயில் மூலமாக அனுப்பலாம் என கூட்டுக்குழுவின் தலைவர் ராஜேந்திர ஆக்ரவால் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதா ஆங்கிலத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டிருந்தது. கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டிய கருத்துகள்கூட ஹிந்தி அல்லது ஆங்கில மொழியில்தான் அனுப்ப வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது சூழலியல் அமைப்புகளும், எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மசோதா வெளியிடப்பட்டு, கருத்துகள் அனுப்ப கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், கடந்த 18ம் தேதியுடன் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. அனைத்து மாநில மக்களும் கருத்து தெரிவிப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் மசோதாவை சட்டமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவதாக தெரியவருகிறது.

மேலும், இத்தனை ஆண்டுகாலம் காடுகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அத்தனைச் சட்டங்களையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மசோதாவில் இடம்பெற்றுள்ள திருத்தங்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். தனியார் நிறுவனங்களின் வணிக வெறிக்காக காடுகளை இரையாக்கும் பல திட்டங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன. எனவே ஒன்றிய அரசு இச்சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு இச்சட்ட மசோதாவிற்கு எதிராக தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.