ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு சசிகலா வரவேற்பு!

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு வி.கே.சசிகலா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால நிர்ணயம் செய்துள்ளதும் மக்களுக்கு பயனளிக்கக்கூடியது. ஆனால் அதேசமயம் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை, எவ்வாறு திரும்பப் பெறுவது, அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ள போதும், வங்கி அல்லாத மற்ற இடங்களில் குறிப்பாக டாஸ்மாக், கோ ஆபரேட்டிவ் வங்கிகள், முத்திரை தாள் விற்பனை போன்றவற்றில் எந்த அளவுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை ஒரு நபரிடமிருந்து பெற முடியும் என்பது குறித்து எந்தவித அறிவிப்பும் வராததால், இதுபோன்ற இடங்களில் எல்லாம் அதிகார வர்க்கத்தினர் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதில் சரியான நெறிமுறைகளை வகுக்கவில்லை என்றால் மத்திய அரசின் நோக்கமும் நிறைவேறுமா? என்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே, முறைகேடுகளை முற்றிலும் தடுக்கும் வகையில், வங்கி அல்லாத பிற இடங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தேவையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.