மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு தலைவர்கள் இரங்கல்!

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் சரத்பாபு (71) இன்று காலமானார். இவரது இறப்புக்கு தென்னிந்திய சினிமா வட்டாரம் இரங்கல் தெரிவித்து வருகின்றது.

நடிகர் சரத்பாபு கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு இன்று உயிரிழந்தார். அவரது உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆந்திராவில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்த சரத்பாபு 1973 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான ராம ராஜ்ஜியத்தின் மூலம் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழில் முதன்முதலாக 1977 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமானர். அண்ணாமலை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பராக நடித்த சரத்பாபுவின் ரோல் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சரத்பாபுவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பல்துறை மற்றும் படைப்பாற்றல் மிக்க நடிகர் சரத்பாபு. அவரது நீண்ட திரை வாழ்க்கையில் பல மொழிகளில் பல பிரபல படைப்புகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், “இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘அருமை நண்பர் நடிகர் சரத்பாபு காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எனது நடிப்பில் வெளியான கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களில் என்னுடன் சேர்ந்து நடித்துள்ளார். மறைந்த சரத்பாபு பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர். குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அதிக அளவில் பாராட்டுகளை பெற்றிருக்கிறார். சரத்பாபு பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என கூறியுள்ளார்.

கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை(மே.23) காலை சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நடிகர் சரத்பாபுவின் உடல் வைக்கப்படுகிறது. மேலும், சென்னையிலேயே அவரது உடல் தகனம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.