பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பெரும் சூழலியல் அழிவு நிகழும்: சீமான் எச்சரிக்கை!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பெரும் சூழலியல் அழிவு நிகழும் என எச்சரித்துள்ள சீமான் அதற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.

சென்னைக்கு வெளியே, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு இடம் தேர்வு செய்தது. சென்னையில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்தது. விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் விவசாய நிலங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் அந்த பகுதி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 300வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் மக்களின் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில் கூறியுள்ளதாவது:-

புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் மற்றும் பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் 300-வது நாளாகத் தொடர் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். உழைக்கும் மக்களை, வளர்ச்சி எனும் பெயரில் ஒடுக்கி, பன்னாட்டுப் பெரு முதலாளிகளுக்காக மட்டுமே ஆளும் அரசுகள் பணிபுரிகின்றன. அரசுகள் மக்களின் வலிமிகுந்த சொற்களை ஒரு பொழுதும் மதிப்பதில்லை. இது ஏகனாபுரத்தின் சிக்கல் மட்டுமல்ல. இத்திட்டம் நிறைவேறினால் குடிநீர் தட்டுப்பாடும், வெள்ளநீர் அபாயமும், சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களையும் பாதிக்கும். மேலும் பெரும் சூழலியல் அழிவும் நிகழும். ஆகையால், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தினை ஆளும் திமுக, பாஜக அரசுகள் முழுவதுமாகக் கைவிடும் வரை நாம் தமிழர் கட்சி மக்கள் போராட்டத்திற்கு தொடர்ந்து வலு சேர்க்கும். இதன் துவக்கமாக வரும் ஜூன் 10 ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்ட வடிவில் காந்தி சாலை, காஞ்சியில் களம் காண இருக்கிறோம். சூழலியல் அக்கறை மற்றும் மக்கள் நலம் கருத்தில் கொண்ட உறவுகள் இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கலாம். இவ்வாறு சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.