கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: செந்தில் பாலாஜி!

டாஸ்மாக் பார்களை அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாக கள்ளத்தனமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர் (கலால்) மற்றும் உதவி ஆணையர்களுடனான (கலால்) ஆய்வுக் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:-

தொழிற்சாலைகளால் கொள்முதல் செய்யப்படும் மெத்தனால், இயல்பு மாற்றப்பட்ட சாராவி மற்றும் தெளிந்த சாராவி ஆகியன உரிய வழிமுறையாக பெறப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். உரிய உரிமதாரர்களுக்கு மட்டுமே சாராவி மற்றும் தெளிந்த சாராவி விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும், பெறப்படுகின்ற மூலப்பொருள் எதனை உற்பத்தி செய்ய வழங்கப்படுகிறதோ, அதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறதா மற்றும் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். மேலும், டாஸ்மாக் கடைகள், எப்.எல்.2 உரிமம் பெற்ற கிளப், எப்.எல்.3 உரிமம் பெற்ற ஹோட்டல், NDRC உரிமதலங்கள் ஆகியவற்றை கண்காணித்து விதிமுறைகள் ஏதேனும் மீதி இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலோர மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லை மாவட்டங்களில் தொடர்புடைய மாவட்ட கலால் அலுவலர்கள் கலால் காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து, காவல் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பினை மேற்கொண்டு வெளிமாநில மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றின் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதுபானக் கடைகள், மதுபான கூடங்கள் டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டவை, மனமகிழ் மன்றங்கள் மற்றும் ஹோட்டல்களுடன் இணைக்கப்பட்ட மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள்ளும் மூடப்படுக்கிறதா என்பதை களஆய்வு மேற்கொள்ள வேண்டும். மதுவில்லா நாட்கள் மற்றும் அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிட்டுள்ள நாட்களில் கடைகள் மூடப்பட்டுள்ளதா என்பதை களஆய்வு மேற்கொண்டு உறுதிசெய்ய வேண்டும்.

தமிழக முதல்வரின் அறிவுரைக்கிணங்க, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துதலை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த வேண்டும். மேலும், அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து மாவட்டத்திற்கும் பகிர்ந்து அளிக்கப்பட்ட நிதியினை முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும், போதை மருந்தை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்டந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் விழிப்புணர்வுப் பேரணி, முகாம்கள், கருத்தரங்குகள், தெரு நாடகங்கள், சிறு நாடகங்கள், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பொது இடங்களில் விளம்பரம் மற்றும் துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், மனித சங்கிலி பேரணி போன்றவற்றின் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த குழு கலந்துரையாடல், துண்டு பிரசுரம், கட்டுரைப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை கல்லூரிகளில் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் எம்.மதிவாணன், மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர்கள் (கலால்) மற்றும் உதவி ஆணையர்கள் (கலால்) ஆகியோர் கலந்து கொண்டார்கள்.