பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: மே 17 இயக்கம்!

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்தேசிய அமைப்பான மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கலை, கைவினைத் திறமைகளை ஊக்குவிப்பதற்காக, கடந்த 2012-ஆம் ஆண்டு 16,000-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் கீழ் பகுதிநேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அப்போது, அரசுப் பணியாளர்களுக்கான பணி விடுப்பு உள்ளிட்ட பணிக்கொடைகள் எதுவும் வழங்கப்படாமல், மே மாதம் நீங்கலாக 11 மாதத்திற்கு மாதம் ரூ.7,700 தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டது.

வாரத்திற்கு 3 அரை நாட்கள் வீதம் 4 பள்ளிகளில் மொத்தமாக மாதம் ரூ.20000 வரை ஊதியம் பெற்று பணியாற்றலாம் என உறுதியளிக்கப்பட்டு, தற்போது வரை ஒரு பள்ளியில் மட்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவும் வயது மூப்பின் காரணமாகவும் பலர் பணியிலிருந்து விலகியதால் தற்போது சுமார் 12,000 சிறப்பாசிரியர்கள் மட்டும் மாதம் ரூ.10,000 பெற்றுக்கொண்டு பணியில் உள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும், தங்களை பிற ஆசியர்கள் போன்று பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய அரசிடம் அதற்கான கூடுதல் நிதியை பெற வேண்டுமெனவும் அப்போதைய அதிமுக அரசிடமும் தற்போதைய திமுக அரசிடமும் பலமுறை கோரிக்கைகளை அளித்தும், அதற்காக தொடர்ந்து போராடியும் வருகின்றனர். அன்றைய அதிமுக அரசு எவ்வித கோரிக்கைகளையும் செவிமடுக்கவில்லை.

2019-ம் ஆண்டு அப்போதைய எதிர்க்கட்சியான திமுக, பணி நிரந்தரம் செய்யக்கோரி சட்டமன்றத்தில் கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. மேலும், திமுக தனது 2021 தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறியிருந்தது. ஆனால், 12,000 பகுதிநேர சிறப்பாசிரியர் குடும்பங்களின் வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற திமுக அரசு பதவியேற்று 2 ஆண்டுகாலம் முடிந்த பின்னும் இதுவரை அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில், கடந்த மே 22 முதல் காலவரையற்ற உண்ணாநோன்பு போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இப்போராட்டம் குறித்து எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வயதானவர்கள், பெண்கள் உட்பட பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினரிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராததை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. பிற அரசு ஊழியர்களை போன்று பகுதிநேர சிறப்பாசிரியர்களை எவ்வித நிபந்தனைகளுமின்றி பணி நிரந்தரம் வழங்கி முழுநேர சிறப்பாசிரியர்களாக ஏற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், பணி நியமனத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசே அவர்களது உழைப்பினை 12 ஆண்டுகாலமாக சுரண்டியுள்ளது கொடுமையானது. இதற்கான இழப்பீட்டினை அரசு அவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.