என்னை எதிர்த்துப் போராட்டம் நடத்துபவர்கள் மீது பரிதாபப்படுகிறேன்: ஆளுநர் தமிழிசை

அரியாங்குப்பம் அரசு சுகாதார நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். தன்னை எதிர்த்துப் போராட்டம் நடத்துபவர்கள் மீது பரிதாபப்படுவதாக கூறினார்.

புதுச்சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலாவதியான மாத்திரைகள் கொடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள், மருந்துகளின் காலக்கெடு மற்றும் அனைத்து மருந்துகளும் 2024, 2025 ஆம் ஆண்டு காலக்கெடுவோடு இருப்பதையும் இருப்பு வைக்கப்பட்டுள்ள மருந்துகள் அனைத்தும் தரமான மருந்துகள் என்பதையும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினார். அதனை தொடர்ந்து இரவு நேரங்களில் மருத்துவர்கள் தேவை என்ற பொது மக்களின் கோரிக்கை விடுத்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்ற துணையே ஆளுநர் முழு நேர மருத்துவர்கள் நியமனம் செய்யப்படும் வரை முதுகலை பயின்ற பயிற்சி மருத்துவர்கள் இருவரை உடனடியாக பணியாமத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அனைத்து வகையான சிகிச்சை முறைக்கும் உபகரணங்கள் மற்றும் கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்தி தரவும் அறிவுறுத்தினார். அப்போது அவருடன் அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு உடன் இருந்தனர்.

அந்த ஆய்வுக்கு பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் மக்கள் சார்ந்த திட்டங்களுக்கு நான் உறுதுணையாக இருந்துள்ளேன். கடந்த ஒரு வருடத்தில் 1200 கோப்புகள் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளேன். 17 கோப்புகளுக்கு மட்டும் தான் சில தகவல்கள் தேவைப்பட்டதால் திருப்பி அனுப்பி வைத்துள்ளேன். இதில் நான் தன்னிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுப்பதில்லை. ஆனால் சிலர் துணை நிலை ஆளுநர் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் முடிவுகள் இல்லாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார் என கூறுகின்றனர். நான் ஒரு கோப்பிற்கு கூட தன்னிச்சையாக முடிவு எடுத்தது கிடையாது. ஆளுநர்களுக்கு என எந்த பொறுப்பு உள்ளதோ அதை தான் நான் நடைமுறைப்படுத்தி வருகிறேன். அதிகார வெறியில் ஆளுநர் செயல்படுகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனக்கு எந்த ஒரு அதிகார வெறியும் இல்லை.

சில பேர் ஆளுநர் மாளிகையை நோக்கி போராட்டங்களை நடத்துகின்றனர். போராட்டம் நடத்துங்கள், ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் அது உங்களது உரிமை. ஆனால் என்னை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் மீது நான் பரிதாபப்படுகிறேன். மேலும் ஆளுநரை வெளியேறக் கூறி போராட்டம் நடத்துகின்றனர். என்னை வெளியேற்றுவதற்கு இவர்கள் யாருக்கும் அதிகாரம் கிடையாது, உரிமையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.