மும்மொழி கொள்கை: அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை சவால்!

மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த தயாரா? என்று அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை சவால் விட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழி பாடப்பிரிவுகளை ரத்து செய்வதாக அறிவித்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 20-ந் தேதி அறிவிப்பு வெளியானது. அதனை எதிர்த்து தமிழக பா.ஜ.க. சார்பில் 25-ந் தேதி வெளியிட்ட அறிக்கைக்கு பிறகே தமிழ்வழி பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்படமாட்டாது என்று அறிவித்தார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தமிழக பா.ஜ.க. எதிர்ப்பு அறிக்கை வெளியான 5 நாட்கள் அமைச்சருக்கு இந்த அறிவிப்பு குறித்து தெரியாதா அல்லது நாங்கள் கேள்வி எழுப்பியிருக்காவிட்டால், இதனை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என்று இருந்தாரா?

அரசுக்கு தெரியாமலேயே அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக கூறுகிறார் அமைச்சர் பொன்முடி. அண்ணா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் இருக்கிறார். அப்படி இருக்கையில், பல்கலைக்கழகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அரசுக்கு தெரியவில்லை என்றால், ஆட்சிக்குழுவில் இடம் பிடிப்பதால் என்ன பயன்? அரசுக்கு தெரிந்தே தமிழ்வழி பாடப்பிரிவுகள் ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மறைக்க ஏதேதோ கூறி மழுப்பப்பார்க்கிறார் பொன்முடி.

பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது என்று கூறியிருக்கிறார் பொன்முடி. உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்கு மட்டுமே தமிழைப் பயன்படுத்தி, பத்திரிகையாளர் சந்திப்பில் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கும் அமைச்சர், கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்வழி கல்வியை மாணவர்கள் மத்தியில் பரவலாக்க, தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தமிழக அரசு எடுத்த முயற்சிகள் என்னென்ன? என்பதை சொல்ல தயாரா?

மும்மொழி கொள்கையை ஆதரிக்கிறாரா அண்ணாமலை என்று கேட்டிருக்கிறார் அமைச்சர். என்னை பொறுத்தவரையில் என் மகன் படிக்கும் பள்ளியில் 3 மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. 20 வயதில் அவர் 5 மொழிகள் கற்றிருக்க வேண்டும் என்பதே என் ஆசை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இதேபோல பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

உலகத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க, நம் குழந்தைகள் பல மொழிகள் கற்றுத்தெரிவது நலம். தி.மு.க. முதல் குடும்பத்தினரும், மற்ற தி.மு.க.வினரும் நடத்தும் பள்ளிகளில் இருமொழி கொள்கையா கடைபிடிக்கப்படுகிறது? பணம் இருந்தால் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். பணம் இல்லாத ஏழை-எளிய மக்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கக்கூடாது என்று நினைக்கும் நீங்கள் எங்களுக்கு பாடம் நடத்தவேண்டாம். 3 மொழிகள் என்றால் இந்தி கட்டாயம் என்ற திசை திருப்பலை தி.மு.க.வினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். புதிய கல்வி கொள்கையின் கீழ், மும்மொழி கற்றலில் இந்தி கட்டாயம் இல்லை. ஆனால் தாய்மொழி கற்பது கட்டாயம். இத்தனை ஆண்டுகளில் முதன் முறையாக தாய்மொழி கற்பது கட்டாயமாக்கப்பட்டிருப்பது புதிய கல்வி கொள்கையில்தான். இதனை உங்களால் மறுக்க முடியுமா? மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த நான் தயார். நீங்கள் தயாரா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.