உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் முடக்கம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் தொகையை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரூ.114.37 கோடி மோசடி செய்ததாக, பெட்டிகோ கமர்ஷியோ இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் கவுரவ் சாச்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில், இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பு, ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் லைகா நிறுவனம் மற்றும் கல்லல் குழுமத்தின் இயக்குநர்கள் மற்றும் நிறுவனர்களான சரவண பழனியப்பன், விஜயகுமரன், அரவிந்த் ராஜ் மற்றும் விஜய் ஆனந்த், லட்சுமி முத்துராமன் மற்றும் ப்ரீத்தா விஜய் ஆனந்த் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த விசாரணையை மேற்கொண்டது.

அமலாக்கத்துறையின் விசாரணையில், புகார்தாரர் குறிப்பிட்டுள்ள நிறுவனத்துடன் சேர்ந்து லைகா நிறுவனம் ரூ.300 கோடி அளவில் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இரண்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 27.4.2023 மற்றும் 16.5.2023 ஆகிய தினங்களில் சோதனை நடத்தி டிஜிட்டல் ஆதாரங்கள், ஆவணங்களைக் கைப்பறியது. இதன் தொடர்ச்சியாக கடந்த 25.5.2023 அன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டன. மேலும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சமும் முடக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் மூலம் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி வந்துள்ளது. இந்த பணப்பரிமாற்றம் குறித்த முறையான ஆவணங்களையோ, சரியான விளக்கத்தையோ இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அளிக்கவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.