ஊருக்கு ஒரு நியாயம்! உங்களுக்கு ஒரு நியாயமா?: ஜெயக்குமார்!

தனது சகோதரர் வீட்டில் அதிகாலை நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இதேபோல் தான் என்னை இரவில் கைது செய்து அன்றிரவு 12 மணிக்கே நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர் செய்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய பேச்சு தான், கடந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்தவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. அதிலும் தனது சகோதரர் அசோக் வீட்டில் அதிகாலை நேரத்தில் அதிகாரிகள் வந்து சோதனையிட்டதை கண்டித்து பலமுறை பேசிவிட்டார்.

இதுதொடர்பான வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பதிலடி கொடுக்கும் வகையில் சில வரிகளையும் குறிப்பிட்டுள்ளார். வீடியோவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, சோதனை தொடர்பாக எந்தவித தகவலும் இல்லை என்று கரூர் எஸ்.பி கூறுகிறார். காலை 5 அல்லது 5.30 மணிக்கு ஒரு வீட்டிற்கு சென்று கதவை தட்டினால், அவர்கள் எழுந்து வர சிறிது நேரம் ஆகும். அதை கூட பொறுத்து கொள்ள முடியாமல் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே செல்லும் போது யாராக இருந்தாலும் பதற்றம் வரத் தான் செய்யும். இப்படி வரும் போது நீங்களாக இருந்தால் என்ன கேட்பீர்கள்? நீங்கள் உண்மையான அதிகாரிகள் தானா? கூட போலீசார் எங்கே? மத்திய தொழில் பாதுகாப்பு படை எங்கே? எனக் கேட்டிருப்பீர்கள். அதன் அடிப்படையில் தான் உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள் எனக் கேட்டனர். நிறைய இடங்களில் ஏமாற்று வேலைகள் நடந்துள்ளன. அதுமட்டுமின்றி இரண்டு பைகளை எடுத்து சென்ற போது, அதை காட்ட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் கேட்டுள்ளனர். அதற்கான விளக்கம் அளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை தானே.
முறையாக பதில் சொல்லியிருக்கலாம். இருந்த போதும் விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. இருப்பினும் எந்தவித பிரச்சினையும் இன்றி முழு ஒத்துழைப்பு வழங்கி அந்த சோதனை நிறைவு பெறும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதன் கீழ் ஜெயக்குமார் இரவில் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.
மேலும், இதேபோல் தான் என்னை இரவில் கைது செய்து அன்றிரவு 12 மணிக்கே நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர் செய்தது. இரண்டு ஆண்டுகளாக காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே வைத்திருந்து செய்த கொடுஞ்செயல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஊருக்கு ஒரு நியாயம்! உங்களுக்கு ஒரு நியாயமா? கர்மா திரும்ப அடிக்கும் என்ற வகையில் ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.