கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு அவரது தந்தை முற்றுப்புள்ளி!

கீர்த்தி சுரேஷின் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (நடிகையர் திலகம்) திருப்புமுனையாக அமைந்தது. இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்ததிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் துபாய் தொழிலதிபர் பர்ஹான் உடன் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் வதந்திகள் பரவியது. இருவரும் ஒரே நிறத்திலான ஆடையை அணிந்ததால் இதுமாதிரி வதந்தி பரவியது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர், “கீர்த்தி சுரேஷ் பர்ஹானுடன் டேட்டிங் செல்லவில்லை. அவர் ஒரு குடும்ப நண்பர் மட்டுமே. சில மீடியாக்கள் தவறாக செய்திகளை பரப்பிவிட்டன. ரசிகர்கள் இதை நம்ப வேண்டாம். திருமணம் குறித்து உண்மையான செய்தியை நாங்களே அதிகாரபூர்வமாக தெரிவிப்போம்” எனக் கூறினார்.