மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: பிரேமலதா

இந்தியாவிற்காக விளையாடும் வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் விவகாரத்திற்காக நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான நியாயத்தை ஒன்றிய அரசு வழங்கவில்லை. அது கண்டிக்கத்தக்கது. இந்தியாவிற்காக விளையாடும் வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

மேகதாது அணை கட்டுவதை தமிழர்கள் உறுதியாக அனுமதிக்க மாட்டார்கள். இந்தத்துறைக்கான தமிழக அமைச்சரும், அணை வராது என்று கூறியுள்ளார். அதை மீறி அணை கட்டும் முயற்சியை தொடங்கினால் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்னை ஏற்படும். இப்பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.