ரயில் விபத்துக்கு காரணமானோர் கடுமையாக தண்டிக்கப்படுவர்: பிரதமர் மோடி!

ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் பாலசோர் நகருக்கு அருகே உள்ள ரயில் நிலையப் பகுதியில் நேற்று மாலை 7 மணி அளவில் இந்த ரயில் விபத்து நேரிட்டது. 3 ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் இன்று (ஜூன் 3) நண்பகல் 2 மணி நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 747 பேர் காயமடைந்திருப்பதாகவும், இவர்களில் 56 பேர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. விபத்தை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, டெல்லியில் இருந்து புறப்பட்டு ஒடிசா வந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு இருந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பிரதமரை விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். விபத்துப் பகுதியை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், விபத்துக்கான காரணம் குறித்தும் பாதிப்பு குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் விளக்கினர். இதையடுத்து, பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருத்துவர்கள் பிரதமரிடம் விளக்கினர். பின்னர், அங்கிருந்தவாறு அமைச்சரவை செயலர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்க உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து டிடி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, “இது ஒரு துயரமான சம்பவம். காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசு வழங்கும். ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தவறிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என தெரிவித்தார்.

இந்த நிலையில் முதியவர் ஒருவர் தனது மகனை அடையாளம் காண அங்கிருந்த உடல்களை ஒவ்வொன்றாக கதறியபடி தேடிய சம்பவம் இதயத்தை ரணமாக்குகிறது. இதுபோல விபத்துக்குளான ரயிலில் பயணித்து காணாமல் போனவர்களை உறவினர்கள் தேடி அலையும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி கலங்கடிக்கிறது.