ஜூலை 4-ந் தேதி இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல்!

இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்-வீராங்கனைகளை கடந்த 7-ந் தேதி சந்தித்த மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் இந்த மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நிர்வாகத்தை கவனித்து வரும் இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிர்வாகிகள் தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி மகேஷ் மித்தல் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு இந்திய ஒலிம்பிக் சங்க தலைமை செயல் அதிகாரி கல்யாண் சவுபே முறைப்படி கடிதம் எழுதி இருக்கிறார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.