ஆளுநரை கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க.வின் அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்வோம்: துரை வைகோ!

ஆளுநர் ரவிக்கு எதிராக மாணவர் அமைப்புகள் முன்னெடுக்கும் போராட்டத்தில் மதிமுக மாணவர் அணியும் பங்கேற்கும் என துரை வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக துரை வைகோ விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டிருப்பதை கண்டித்து, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு -தமிழ்நாடு (Federation of Students Organisation – Tamil Nadu) சார்பில் வரும் 16ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முன்வந்து இருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். மறுமலர்ச்சி தி.மு.க மாணவர் அணியும் மேற்கண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளது.

கழக மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் ஒருங்கிணைப்பில் சென்னை மண்டல மாணவர் அணி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்வதோடு, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட கழகத் தோழர்களும் மாணவர் அணி நிர்வாகிகளுடன் இணைந்து கழக கொடியுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஆளுநரை கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க.வின் அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்வோம். கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பிற்கு (Federation of Students Organisation – Tamil Nadu) எனது வாழ்த்துகள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.