மக்களை பிளவுபடுத்தி பாஜக அரசியல் ஆதாயம் அடைய முற்படுகிறது: திருமாவளவன்

பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்தி பாஜக அரசியல் ஆதாயம் அடைய முற்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்தை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்புச் செய்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து பாஜக அரசின் தூண்டுதலால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பாஜக அரசின் பெரும்பான்மைவாத நோக்கத்தை நிறைவேற்றும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சட்ட அமைச்சகம் தனது சுயேச்சைத் தன்மையை இழந்து விட்டதா? என்ற கேள்வியைத்தான் இந்த அறிவிப்பு எழுப்புகிறது. ஏற்கனவே சீக்கிய மதத்தினரும், பௌத்த மதத்தினரும் தங்களுக்குத் தனியே குடும்ப சட்டங்கள் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தங்களை இந்து குடும்ப சட்டத்துக்குள் உள்ளடக்கியிருப்பதை எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமயத்தினருக்கு இருக்கும் குடும்ப சட்டங்களையும் ஒழித்துக்கட்ட மோடி அரசு முற்படுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்னும் இந்து ராஷ்டிரம் எனப்படும் ‘சனாதன ராஷ்ட்ரக்’ கனவின் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்கிற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளது. அனைத்துத் தளங்களிலும் படுதோல்வி அடைந்து விட்ட பாஜக அரசு, மக்களின் கவனத்தைத் தனது தோல்வியிலிருந்து திசை திருப்புவதற்காகவே இத்தகைய பிரச்சனைகளை எழுப்புகிறது. விலைவாசி ஏற்றம், வேலையில்லாத பிரச்சினை, பொருளாதார வீழ்ச்சி என சுதந்திர இந்தியாவில் அமைந்த ஆட்சிகளிலேயே மிகவும் மோசமான ஆட்சி இந்த பாஜக ஆட்சிதான் என்ற விமர்சனத்தை மோடி அரசு சந்தித்துக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களைக் குறி வைத்து தாக்குதல் தொடுப்பதன் மூலம் இந்தியாவில் பெரும்பான்மை மதத்தவராக இருக்கும் இந்துக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று பாஜக மனப்பால் குடிக்கிறது. இந்துக்களில் பெரும்பான்மையாக இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களும் பட்டியல் சமூகத்தினரும் பழங்குடி மக்களும் இந்த ஆட்சியாளர்களால் கடுமையான ஒடுக்குமுறைக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளனர். 2024 பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்திலிருந்து தாம் தூக்கி எறியப்படுவோம் என்பதை முன்கூட்டியே புரிந்துகொண்டதால் மக்களைப் பிளவுபடுத்தும் சமூகப் பிரிவினைவாத அரசியலில் அது தஞ்சம் புகுந்துள்ளது. அதனைத் தீவிரமாக முடுக்கிவிடுகிறது. அரசியல் லாபத்துக்காக நாட்டில் சமூகப் பதற்றத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கிட சதிசெய்யும் பாஜக- சங்பரிவார் அரசின் பொது சிவில் சட்ட அறிவிப்பை எதிர்த்து முறியடிக்க அனைத்து சனநாயக சக்திகளும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.