மோடி 3-வது முறையாக பிரதமராக வர வேண்டும்: மதுரை ஆதீனம்

மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மதுரை ஆதீனம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-

மோடி மூன்றாவது முறையாகவும் பிரதமராக வரலாம். அவருடைய தமிழ் உணர்வு அதற்கு பயன்படும். அவர் பிரதமராக வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அவர் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததைப் பாராட்ட வேண்டும் எனும் நோக்கில் தான் செங்கோல் கொடுத்தேன். தமிழர் தான் பிரதமராக வர வேண்டும். தமிழ்நாட்டையும் தமிழரே ஆள வேண்டும். அதுபோல இந்தியாவையும் தமிழர்கள் தாராளமாக ஆளலாம். தமிழ்நாட்டிலிருந்து யாரை வேட்பாளராக அறிவித்தாலும் ஆதரிப்போம்.

பிரதமர் மோடி திருக்குறள் தேவராத்தை விரும்பி கேட்பவர். உலகம் முழுவதும் திருக்குறளின் பெருமையை சொல்கிறார். மோடி தமிழர்களுக்கு விரோதமானவர் அல்ல. எய்ம்ஸ் மருத்துவமனையை நிச்சயம் கொண்டு வருவார்கள்.

நான் எந்த அரசியல் கட்சியின் பிரசாரத்திற்கும் போக மாட்டேன். யார் வந்தாலும் வாழ்த்து சொல்வேன். நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ரசிகர்கள் என்னைப் பகைப்பார்கள்.

ஆதீன மடாதிபதியாக இருப்பது முள் மேல் இருப்பது போலிருக்கிறது. ஏன் வந்தோம் எனத் தோன்றுகிறது. எனக்குப் பிடிக்கவில்லை. சிறு வயதிலிருந்தே பல்வேறு மடங்களிலும் ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். முந்தைய ஆதீனத்தை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து உள்ளனர். இந்த சொத்தை மீட்டது போலவே சிவகங்கையில் உள்ள 1900 ஏக்கர் நிலத்தையும் மீட்டு, அங்கு விவசாய பல்கலை அமைக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.