மாமன்னன் படக்குழுவினரை பாராட்டிய இயக்குனர் பா.இரஞ்சித்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மாமன்னன் படக்குழுவினரை இயக்குனர் பா.இரஞ்சித் பாராட்டியுள்ளார்.

‘கண்ணை நம்பாதே’ படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ‘மாமன்னன்’ படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. அதுமட்டுமல்லாமல் ‘மாமன்னன்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்தின் டிரைலரை பாராட்டி இயக்குனர் பா. இரஞ்சித் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “உன் திரைமொழியின் வளமையும், கதையும், கதையின் மாந்தர்களும் உண்மையை கேட்ககூடியவர்களை சென்றடையட்டும்! சிறப்பான முன்னோட்டத்தை தந்த தம்பி மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.