டெல்லியில் யாரும் பாதுகாப்பாக இல்லை: ஸ்வாதி மாலிவால்!

டெல்லியில் யாரும் பாதுகாப்பாக இல்லை என மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளதாவது:-

டெல்லியில் சட்டம் – ஒழுங்கு முழுவதுமாக சீரழிந்துள்ளது. ஏழையோ, செல்வந்தரோ, டெல்லியில் யாரும் பாதுகாப்பாக இல்லை. குடிசைப் பகுதியில் வாழ்ந்தாலும் சரி, அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்தாலும் சரி எங்கும் பாதுகாப்பில்லை.

டெல்லி பல்கலைக் கழகத்தின் 19 வயது மாணவன், சக தோழியுடன் வெளியே சென்றுள்ளார். சிலர் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அவரைக் காக்க மாணவன் முயன்றபோது அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இடத்தில் இரு பெண்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தலைநகரில் என்ன நடந்துகொண்டிருக்கிறது. டெல்லி அரசும் மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.