காமராஜர் கொண்டு வந்தது திராவிட மாடல் தான்: ஆ.ராசா

காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல; அதுவும் திராவிட மாடல் தான் என, கோவையில் தி.மு.க., எம்.பி., ஆ.ராசா பேசினார்.

கோவையில் ‘திராவிட மாடல் தான் தேசிய மாடல்’ என்ற தலைப்பில் தி.மு.க., பயிலரங்கம் நேற்று (மே 15) நடந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். செந்தில் பாலாஜி பேசுகையில், ”மனிதனை மனிதனாக நடத்துவது திராவிட மாடல். சில பேர் குஜராத் மாடல் என்கின்றனர். ஆனால் அங்கு மின்வெட்டு உள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. அதேநேரம் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கி வருவது திராவிட மாடல். பல்வேறு மாநில முதல்வர்களும் நம் முதல்வரின் ஆட்சியை பாராட்டி வருகின்றனர்,” என்றார்.

தி.மு.க., துணை பொதுச்செயலாளர் எம்.பி., ராசா பேசியதாவது:-

தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் திராவிட மாடல் பேசப்படுகிறது. பெண்களுக்கு முதன் முதலில் வாக்குரிமை கொடுத்தது திராவிடம். ஈ.வெ.ரா.,வின் நோக்கம் கடவுள் எதிர்ப்பு மட்டுமல்ல; பெண்ணியம், சாதி ஒழிப்பு, பெண்களுக்கு சொத்தில் பங்கு ஆகியவையும் தான்.

கடந்த, 1996ம் ஆண்டில் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கினார். இது திராவிட ஆட்சியில் நடந்தது. காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல; அதுவும் திராவிட மாடல் தான். எதை கொடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் படிப்பார்கள் என்பதை அறிந்து பள்ளியில் உணவை கொடுத்தது திராவிட மாடல். இவ்வாறு அவர் பேசினார்.

காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று நீண்ட காலமாக காங்கிரஸ் பிரசாரம் செய்து ஓட்டு கேட்கிறது. இந்நிலையில் காமராஜர் ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று ஆ.ராசா பேசியது காங்கிரசார் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.