பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்கு உள்பட்ட ஒரு வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டினா். முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக பிரிஜ் பூஷண் மீது டெல்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. அதில் ஒரு வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகும். 18 வயதுக்கு உள்பட்ட வீராங்கனையின் புகாரில் இந்த வழக்கு பதியப்பட்டது.
இதனிடையே, பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தா் மந்தா் பகுதியில் வினேஷ் போகாட், சங்கீதா போகாட், சாக்சி மாலிக், சத்யவா்த் காடியான், பஜ்ரங் புனியா, ஜிதேந்தா் கின்ஹா உள்ளிட்ட மல்யுத்த வீரா்-வீராங்கனைகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், பிரஜ் பூஷணுக்கு எதிரான வழக்கில் டெல்லி காவல்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். மேலும், 18 வயதுக்கு உள்பட்ட வீராங்கனையின் தந்தையால் அளிக்கப்பட்ட இப்புகாரில் உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதால் பிரஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு காவல்துறையினர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், பிரஜ் பூஷண் வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 27-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் தொடரவுள்ளது.