இந்தியாவில் காங்கிரஸ் – பாஜக இடையே கொள்கை யுத்தம்: ராகுல்

இந்தியாவில் நடப்பது கொள்கை யுத்தம்; பீகாரில் காங்கிரஸ் மரபணு உள்ளது என பாட்னாவில் காங்கிரஸ் கட்சியினரிடையே பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

பாட்னாவில் காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பாட்னா வருகை தந்தனர். பாட்னாவில் ராகுல், கார்கேவுக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக இந்தியாவில் இரண்டு வகையான எண்ண ஓட்டங்கள் இப்போது இருக்கின்றன. ஒன்று இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவோம் என்ற காங்கிரசின் எண்ண ஓட்டம். மற்றொன்று பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். ஆகியோரின் பாரதத்தை துண்டாடுவோம் என்கின்ற எண்ண ஓட்டம். நீங்கள் எங்களுடைய இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவோம் பாதையாத்திரையின் போது மிகுந்த உதவி செய்தீர்கள். நான் எங்கு சென்றாலும் அது தமிழ்நாடாக இருக்கட்டும், கேரளவாக இருக்கட்டும், அல்லது தெலுங்கானாவாக இருக்கட்டும் அங்கு பீகாரில் இருந்து வந்திருந்தவர்கள் என்னுடைய பாதை யாத்திரையில் கலந்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே பீகார் மக்கள் எங்களுடைய இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவோம் என்ற எண்ண ஓட்டத்தை நன்றாக புரிந்துக் கொள்கிறீர்கள்.

பாஜக நாட்டை மக்களை பிரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் நாட்டையும், நாட்டு மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. வெறுப்புணர்ச்சியை வெறுப்புணர்ச்சியால் வெல்ல முடியாது. வெறுப்புணர்ச்சியை அன்பால் தான் வெல்ல முடியும். நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும் இங்கு வந்துள்ளனர். ஒன்றாக இணைந்து பிஜேபியை தோற்கடிக்க நாங்கள் முயன்று வருகிறோம். தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில தேர்தல்களில் நிச்சயம் வெற்றிபெறுவோம். 4 மாநில தேர்தல்களில் பாஜக எங்குள்ளது எனத் தெரியாத வகையில் துடைத்தெறியப்படும். பீகார் மக்களும் பாஜகவின் எண்ணம் அறிந்து செயல்பட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும்; பீகாரில் நாம் வென்றாலேயே ஒட்டுமொத்த இந்தியாவிலும் வெல்வதாக அர்த்தம் என்றார்.