ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு ஆய்வுக் கூடமாக பயன்படுத்துகிறது: மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு ஆய்வுக் கூடமாக பயன்படுத்துவதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் நேற்று (ஜூன் 23) கலந்து கொண்ட நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியதாவது:-

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஜம்மு-காஷ்மீர் போல் மாற்றி விடும். உண்மையில் இது இந்தியாவின் மீதான அடி. முதலில் ஜம்மு-காஷ்மீருக்கு சட்டவிதி 370-ன் கீழ் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கினர். பின்னர், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மூன்று பேர் உள்பட பல தலைவர்களை சிறையிலடைத்தனர். ஜம்மு-காஷ்மீர் அவர்களுக்கு ஒரு ஆய்வுக்கூடமாக இருந்தது. டெல்லி இன்று சந்திக்கும் மத்திய அவசரச் சட்டம் போன்ற பிரச்னைகள் ஜம்மு-காஷ்மீரில் முன்னதாகவே தொடங்கிவிட்டது. வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு நசுக்கப்படும். ஒட்டு மொத்த இந்தியாவின் நிலையும் தற்போது உள்ள காஷ்மீரின் நிலைக்கு மாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.