மலேசியாவில் இருந்து நாடு திரும்ப பெண்ணுக்கு உதவிய விஜய் சேதுபதி!

மலேசியாவில் விசா காலம் முடிந்தும் தமிழ்நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்த பெண்ணுக்கு விஜய் சேதுபதி
உதவியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அட்லீ இயக்கத்தில் தமிழ், இந்தி மொழிகளில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் கத்ரீனா கைப் உடன் இணைந்து மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், அண்மையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படம் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதே நேரத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் இணைந்து நடித்த ‘விடுதலை’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படத்தில் வாத்தியாராக மிரட்டியிருந்தார். இதனையடுத்து இதன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார்.

சமீப காலமாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் பெரிதான வரவேற்பை பெறாத நிலையில் தற்போது ஆறுமுக குமார் இயக்கத்தில் ஹீரோவாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம்’ என்ற படத்தை இயக்கியவர். இவர் தற்போது இயக்கி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜய் சேதுபதியை காண அங்குள்ள மலேசியா வாழ் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். விஜய் சேதுபதியும் சலிக்காமல் அவர்களும் செல்பி புகைப்படங்கள் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் அங்குள்ள தமிழ் நாட்டை சார்ந்த பெண்மணி ஒருவருக்கு விஜய் சேதுபதி செய்துள்ள உதவி இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அதாவது மலேசியாவில் வீட்டு வேலைக்கு சென்ற பெண், வேலை பிடிக்காததால் அங்கிருந்து வெளியில் வந்து கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்து வந்துள்ளார். மேலும் விசா காலம் முடிந்தும் தமிழ்நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்துள்ளார். இந்த விஷயத்தை கண்ணீருடன் அந்தப்பெண் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விஜய் சேதுபதி பேசி, அந்த பெண் நாடு திரும்புவதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளாராம். இந்த தகவலை வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து இந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவியதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதியை பாராட்டி தள்ளி வருகின்றனர்.