திமுக அரசு மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிப்பதிலேயே குறியாக இருக்கிறது: அண்ணாமலை

திமுக ஆட்சிக்கு வந்தது முதல், ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதையே தொடர்ந்து செய்து வருகிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதையே தொடர்ந்து செய்து வருகிறது. தமிழ்நாட்டில் சிதிலமடைந்த சுமார் பத்தாயிரம் அரசுப் பள்ளிக் கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப் போவதாகக் கூறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்தும், இன்னும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பள்ளிகளுக்கான தரமான கட்டடங்கள் இல்லாமல், மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறது திறனற்ற திமுக அரசு.

ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்று, பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும், அவர்களுக்கான நிரந்தரத் தீர்வு இன்னும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் ஆசிரியர்களின் பணி நியமனம் எப்போது மேற்கொள்ளப்படும் என்று இன்னும் அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளிகள் அணி தேர்வு செய்து அனுப்பப்படவில்லை. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் என்பது, ஒவ்வொரு விளையாட்டு வீரர்களின் கனவு. பள்ளி அளவிலான தேசியப் போட்டிகள், மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கும், அவர்களுக்கான அடுத்த கட்ட பயிற்சிக்கும், நல் வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால், தமிழகம் சார்பாக இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தாமல், மாணவர்களை வஞ்சித்துவிட்டு, துறைகள் மீது மாற்றி மாற்றி பழி போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இப்படி, ஏழை எளிய மாணவர்களுக்கான ஒவ்வொரு வாய்ப்புகளையும், தங்கள் மெத்தனப் போக்கினால் கோட்டை விட்ட தமிழக அரசு, இதன் உச்சகட்டமாக, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்தின் வாயிலாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் கல்விக் கட்டணத்தைக் குறைத்திருக்கிறது திறனற்ற திமுக அரசு.

2021 ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில், மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு 3767.55 கோடி ரூபாய் வழங்கியுள்ள நிலையில், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக வழங்கப்படும் நிதியைப் பெருமளவில் குறைத்திருக்கிறது திமுக அரசு. இதனால், மீதக் கட்டணத்தை, பெற்றோர்களிடமிருந்து வசூலிக்க, பள்ளிகள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிகிறது. திமுகவின் இத்தகைய ஏழை எளிய மக்கள் விரோத நடவடிக்கைகள், அனைவருக்கும் கல்வி உரிமைத் திட்டம் என்ற நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.

இரண்டு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளுக்காக, பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல், தொடர்ந்து, கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைப்பது, காலதாமதமாக வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளால், ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைப் பறிப்பதிலேயே குறியாக இருக்கிறது திமுக. திறனற்ற திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகள், திமுகவினர் நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் பயனடைவதற்காக, ஏழை எளிய மாணவர்களுக்கான கல்வி மற்றும் இதர வாய்ப்புகளைச் சிதைக்கும் முயற்சியில் இந்த அரசு ஈடுபடுகிறதோ என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுந்திருக்கிறது. உடனடியாக, ஏழை எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பாதிக்கும்படியான எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை குறைத்து வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற்று, ஏழை எளிய மாணவர்கள் தரமான கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் திறனற்ற திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.