அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஏழை, எளியோர், தொழிலாளர்களின் அன்னபூரணியாக விளங்கிய அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது:-

மூன்று வேளையும் குறைந்த விலையில் ஏழை, எளியவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2013-ம் ஆண்டு அம்மா உணவகங்களை தொடங்கினார். மக்களுடைய ஏகோபித்த ஆதரவின் காரணமாக இந்த உணவகங்கள் படிப்படியாக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் சில பேரூராட்சிகள் என தமிழகம் முழுவதும் விரிவாக்கப்பட்டது. சென்னையில் ஒரு வார்டுக்கு 2 என்ற எண்ணிக்கையில் 200 வார்டுகளிலும், அரசு பொது மருத்துவமனைகளிலும் 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு இட்லி, பொங்கல், கலவை சாதங்கள், சப்பாத்தி போன்ற உணவு வகைகள் மலிவு விலையில் வழங்கப்பட்டது. இதன்மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் பசிப்பிணியை தீர்த்துக் கொண்டனர். இந்த உன்னத திட்டத்தைக் கொண்டு வந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, மக்கள் அனைவரும் மனதாரப் பாராட்டினார்கள். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் அனைத்துத் தொழில்களும் முடங்கியபோது, தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களுக்கு வருகைதரும் அனைவருக்கும் விலையில்லாமல் 3 வேளையும் உணவு வழங்கினோம். இதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

அ.தி.மு.க. அரசு இருந்தவரை, அம்மா உணவகங்களுக்கு தேவையான அரிசி மற்றும் கோதுமை தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாகவும்; சமையலுக்குத் தேவையான காய்கறிகள் கூட்டுறவு பண்டக சாலைகளில் இருந்தும் வழங்கப்பட்டு வந்தது. `அம்மா’ என்ற சொல்லைக் கேட்டாலே காதில் ஈயம் காய்ச்சி ஊற்றியதுபோல் பதறும் இந்த விடியா தி.மு.க. அரசின் ஆட்சியாளர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அடித்து நொறுக்கி, படிப்படியாக மூடுவிழா நடத்தி வருகின்றனர். உணவுப் பொருட்கள் வழங்குவது 90 சதவீதம் குறைக்கப்பட்டு விட்டது. பல இடங்களில் மிக்சி, கிரைண்டர் போன்றவை வேலை செய்யவில்லை; குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்துள்ளது. குடிநீர் முழுமையாக வழங்கப்படுவதில்லை. பல அம்மா உணவகங்களின் மேற்கூரைகள் சரியில்லை என்று காரணம் காட்டி மூடப்படுகிறது. அம்மா உணவகங்களுக்கு சாப்பிடச் செல்லும் மக்கள் 2021-க்கு முன்பு இருந்த அம்மா உணவகங்களையும், அதன் தற்போதைய நிலையையும் கண்ணீருடன் ஒப்பிடுகின்றனர்.

ஜெயலலிதா அரசில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆட்சியாளர்கள் நேரில் வந்து அம்மா உணவகங்களின் சேவையைப் பார்த்து, அவரவர்கள் மாநிலத்தில் தொடங்கினார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மா உணவகங்களை மூடும் படுபாதகமான செயலை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நான் பலமுறை சட்டமன்றத்திலும், பேட்டியிலும், அறிக்கைகள் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அம்மாவின் அரசில் ஏழை, எளியோர் மற்றும் தொழிலாளர்களின் அன்னபூரணியாக விளங்கிய அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்கி, ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசியை முழுமையாக போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சி என்ற பெருமையைப் பெற்ற விடியா தி.மு.க. அரசு குறைந்த அளவு நிதியை ஒதுக்கி, விஞ்ஞான முறையில் அம்மா உணவகங்களை மூட முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.