பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் கல்வித்துறையில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். நீண்டகாலமாக ஆர்ப்பாட்டம், போராட்டத்தின் மூலம் தங்கள் கோரிக்கைகளை அரசிற்கு தெரிவித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் கணினி, ஓவியம், உடற்கல்வி, இசை, தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கல்வித்துறை, பகுதிநேர ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கு மே மாதம் சம்பளம் அளிக்கப்படுவதில்லை. ஆகவே பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளான, பணி நிரந்தரம், சம்பள உயர்வு, பணியின் போது இறந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிதியுதவி, அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் போன்ற பல்வேறு நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.