மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து விபத்து: 25 பேர்பலி!

மகாராஷ்டிராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து புனேவுக்கு 32 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டது. இது நள்ளிரவில் புல்தானா பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் உரசி, தடுப்புகளில் மோதி கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கிவிட்டது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் உடடியாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. புல்தானா மாவட்டத்தில் உள்ள சிந்த்கேதராஜா அருகே உள்ள பிம்பால்குடா கிராமத்திற்கு அருகில் உள்ள சம்ருதி மகாமார்க் விரைவு நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து 7 பேரை காப்பாற்றியுள்ளனர்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “பஸ் வலதுபுறத்தில் இருந்த மின் கம்பத்தில் முதலில் மோதியது. இதனால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார். பின்னர் டிவைடரில் மோதி பஸ் இடதுபுறமாக கவிழ்ந்துவிட்டது. அதாவது கதவு உள்ள பகுதி ரோட்டில் சாய்ந்துவிட்டது. இதனால் மக்கள் உடனடியாக அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். அதுமட்டுமல்லாது சாலை முழுவதும் டீசல் பரவியதால் உடனடியாக பஸ் தீப்பற்றிக்கொண்டது. எனவே எங்களாலும் மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை” என்று கூறியுள்ளனர். சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பஸ்ஸில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 25 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் கருகியுள்ளதால் அதை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து மகாராஷ்டிரா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். பேருந்தின் டயர் வெடித்ததில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.